போதைப்பொருள் வியாபாரி ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சட்டவிரோதமாக விடுவிப்பதற்காக, தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 31ஆம் திகதி 2 கிராம் 385 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்து, தெல்தெனிய நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவு பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கண்டி – தென்னேகும்புர பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபர் 10 கிராம் 795 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தென்னேகும்புர பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
எனினும், கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் விடுவிப்பதற்காக, வேறொரு நபர் தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு 5 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக வழங்க முயன்றுள்ளார்.
இதன்போது, தலைமையக பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தந்திரோபாய நடவடிக்கையின் மூலம், இலஞ்சப் பணத்தைக் கொடுக்க வந்த நபர் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தினுள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி, தென்னேகும்புர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞராவார். அவரிடமிருந்த 5,000 ரூபாய் பணத்தாள்கள் 100 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்ட விதிகளின்படி மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
