இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சாஹிர் கான் இணை உரிமையாளராக உள்ள ஸ்டாக்ஹோம் தலைமையகத்தை கொண்ட Anchor Sports AB நிறுவனம், லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் யாழ்ப்பாண கிங்ஸ் அணியை கையகப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அணி Anchor Jaffna Kings என்ற புதிய பெயரில் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
முன்னதாக, போட்டி முறைகேடு குற்றச்சாட்டில் முன்னாள் இணை உரிமையாளர் மஞ்சோத் கல்ரா கைது செய்யப்பட்டதையடுத்து, அணி இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் LPL உரிமை நிறுவனமான IPG ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது.
Anchor Sports AB நிறுவனத்தின் இணை உரிமையாளர்களாக சாஹிர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌத்தம் உள்ளனர். இந்நிறுவனம் பெல்ஜியத்தின் European T20 Premier League மற்றும் கனடாவின் Super60 League அணிகளிலும் முதலீடு செய்துள்ளது.
LPL வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியான யாழ்ப்பாண கிங்ஸ், ஐந்து தொடர்களில் நான்கு முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அணியின் புதிய உரிமையாளராக இணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த சாஹிர் கான், இலங்கை கிரிக்கெட்டின் திறமையான வேகப்பந்து வீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
LPL போட்டித் தொடரின் பணிப்பாளர் சமந்த டொடன்வெலவும், சாஹிர் கானின் வருகை இலங்கை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலாக அமையும் என தெரிவித்துள்ளார்.
