கடுவெல பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடுவெல – மாத்தறை பயணிக்கும் சொகுசு பேருந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்குள் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வாராந்த சந்தை மைதானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பேருந்துக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயினால் குறித்த சொகுசு பேருந்து முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடுவெல – கொள்ளுப்பிட்டி வழித்தட சாதாரண பேருந்துகள் இரண்டுக்கும் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற போது பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் இருவரும் அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அருகிலிருந்த மற்றொரு பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் தீ வைக்கப்படும் சம்பவத்தை அவதானித்து எச்சரிக்கை வழங்கியதை அடுத்து அவர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தீவைப்பு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், கடுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
