தெல்தெனிய தலைமையக பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்க முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை விடுவிப்பதற்காக குறித்த இலஞ்சத் தொகையை வழங்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 31ஆம் திகதி தெல்தெனிய கோவில் அருகில் 2 கிராம் 385 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்பு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முக்கிய போதைப்பொருள் வர்த்தகர் என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நபர் கடந்த 03ஆம் திகதி தென்னேகும்புர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 10 கிராம் 795 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் பணம், கையடக்கத் தொலைபேசி மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த சந்தேகநபரை விடுவிப்பதற்காக தெல்தெனிய தலைமையக பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்திரபாலவுக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்க முயன்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட நிலையில், பணத்தை வழங்க முற்பட்ட போது பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டதுடன், குறித்த பணமும் சான்றுப் பொருளாக கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இலஞ்சச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் வர்த்தகத்துடன் குறித்த நபருக்கு உள்ள தொடர்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
