அமைச்சர்கள் உத்தியோகபூர்வ அரச பங்களாக்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்திற்கு அமைய, கொழும்பில் அமைந்துள்ள 7 அரசுக்குச் சொந்தமான பங்களாக்களை பொருளாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த பங்களாக்களை பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு யோசனைகளைக் கோரியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, 24 அரச பங்களாக்களை பொது–தனியார் பங்களிப்பு அடிப்படையில் 30 வருட காலத்திற்கு குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக 7 பங்களாக்கள் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய பங்களாக்களும் இதில் அடங்குகின்றன.
குறித்த பங்களாக்கள் உணவகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.
இதற்கான யோசனைகளை சமர்ப்பிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
