உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிங்கள திரைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் சட்டவிரோதமாகப் பதிவேற்றிப் பகிர்ந்தமை தொடர்பில் மொரட்டுவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர் ஜனித மாரசிங்கவின் திரைப்படத்தை பேஸ்புக் மற்றும் டெலிகிராம் ஊடாக பகிர்ந்த நபருக்கு எதிராக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரசித ஜினசேன, இவ்வாறான திரைப்படத் திருட்டு சிறிய குற்றமல்ல என்றும், அது குற்றச் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கொரலவெவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இதனுடன் தொடர்புடையவர் எனத் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில், குறித்த மாணவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு சம்பவம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், திரைப்படத் திருட்டை கட்டுப்படுத்தவும், இதற்கு எதிரான சட்டங்களை மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
