கல்வி துறையை மேம்படுத்தல் மற்றும் கல்வி துறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவால் விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியுள்ளனர்.
தரமான கல்வி முறையொன்றைக் கட்டியெழுப்புவதற்காக ஆசிரியர் சேவையின் தொழில்சார் தன்மையை மேம்படுத்துதல், ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்த்தல், உயர்கல்வி நிறுவனங்களின் மனித வளத்தை வலுப்படுத்துதல் மற்றும் கல்வித் துறையில் காணப்படும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குதல் தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாடசாலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல், ஆசிரியர் இடமாற்றச் செயன்முறையை முறையாக முன்னெடுத்தல் மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பில் கலந்துரையடல்கள் இடம்பெற்றன.
குறிப்பாக, விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் மற்றும் ஆசிரியர் தேவைகள் காணப்படும் பிரதேசங்களை அடையாளம் கண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பாடசாலைகளுக்கு விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
