இலங்கையில் எந்தவிதமான இறக்குமதிப் பொருட்களும் இன்றி சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு முன்னணி தனியார் வணிக வங்கிகளின் முகாமையாளர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினரால் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டைப் பகுதியில் இயங்கி வந்த பிரபல பணப் பரிமாற்ற நிலையம் ஒன்று, எவ்வித இறக்குமதிப் பொருட்களோ அல்லது முறையான ஆவணங்களோ இன்றி, பல வங்கிக் கணக்குகள் வழியே இந்த பாரிய நிதியை வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்துள்ளது.
இச்சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தை எவ்வித தடங்கலுமின்றி மேற்கொள்வதற்காக, கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர்களுக்கு குறித்த மோசடி நபரால் வாரம் தோறும் இலஞ்சப் பணம் வழங்கி வரப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் நிலைக்கு ஏற்ப வாரத்திற்கு 30,000 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் 1 இலட்சம் ரூபாய் வரை இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட ஒரு வங்கி முகாமையாளருக்கு ஒரே சந்தர்ப்பத்தில் 10 இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தீவிர விசாரணைக்குப் பின்னர், இந்த 4 அதிகாரிகளையும் அவர்கள் பணிபுரிந்த வங்கி வளாகங்களுக்குள்ளேயே வைத்து கைது செய்தனர்.
இலங்கை வரலாற்றில் வங்கி அதிகாரிகள் நேரடியாக சம்பந்தப்பட்டு இடம்பெற்ற மிகப்பாரிய நிதியியல் மோசடி நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படும் நிலையில், இலங்கையில் இவ்வாறான தொகையிலான குற்றத்திற்காக வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விரிவான விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
