டுபாய் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என அறியப்படும் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் டுபாயில் வைத்து அந்நாட்டுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஷிரான் பாசிக், அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.
இந்நிலையில் விமானநிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, சந்தேகநபரிடம் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, டுபாயில் வர்த்தக வளாகமொன்றில் இருந்தபோது அந்நாட்டுப் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அமெரிக்கா – ஈரானுக்கிடையில் ஏற்பட்ட போர்ச் சூழலின் போது டுபாய் மீது தாக்குதல் நடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் விமானங்கள், ஏவுகணைகள் தொடர்பான புகைப்படங்களையும் காணொளிகளையும் அவரது தொலைபேசியில் வைத்திருந்தமை கண்டறியப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.
மேலும், இலங்கைக்கு நாடுகடத்தப்படும் வரை டுபாய் பொலிஸார் ஈரானுடனான தொடர்புகள் குறித்து தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும் சந்தேகநபர் கூறியுள்ளார்.
இந்நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கொன்றில் இலங்கை பொலிஸாரால் பெறப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை முன்னதாக நீக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் பெரேராவின் மேற்பார்வையின் கீழ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கமல் அபேவங்ஸவின் முறைப்பாட்டுக்கமைய இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
