மட்டக்களப்பு, ஆகஸ்ட் 19 — கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் 20 வயதுடைய மாணவி ஒருவர் இன்று (19) தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடகத்துறையில் முதலாம் ஆண்டு கற்கைக்காக தெரிவாகி, விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார்.
சம்பவத்தை நேரில் கண்ட இரு மாணவிகள் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்த நிலையில், அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான ஏழு மாதங்களில் 84 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 2025ஆம் ஆண்டு முழுவதும் மாவட்டத்தில் 164 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
