இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில் உள்ள சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களை உடனடியாக அகற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (19) இந்த விடயத்தை முன்வைத்த அவர், நாட்டுக்குத் திரும்பும் அகதிகளின் குடியுரிமையை உறுதிப்படுத்துதல், பாதுகாப்புப் பிரிவின் அனுமதி பெறல், பயண ஆவணங்களைப் பெறுதல், காணி, வீடமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றில் தொடர்ந்து பல்வேறு நிச்சயமற்ற நிலைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, யுத்த காலத்தில் உத்தியோகபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைச் பிரஜைகள் எதிர்கொள்ளும் சட்டத் தடைகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அமைச்சரவையின் அனுமதியுடன் புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டு, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்புவார்களாயின், இந்தியாவில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் அல்லது துணை உயர்ஸ்தானிகரகங்களை அணுகித் தங்களின் குடியுரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் விளக்கமளித்தார்.
விண்ணப்பதாரர்கள் தங்களிடம் உள்ள அடையாள மற்றும் குடியுரிமை ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர், அரச புலனாய்வுச் சேவை (SIS) மூலமாகப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்ற நாடாளுமன்ற சாணக்கியன் இராசமாணிக்கம், ஏதிலிகள் மீண்டும் திரும்பும் நடைமுறைகள், ஆவணத் தேவைகள், பாதுகாப்புப் பெறல் மற்றும் வருகைக்குப் பின்னரான உதவிகள் தொடர்பில் தெளிவான வழிகாட்டுதல்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், மீண்டும் திரும்பும் குடும்பங்களுக்கு காணி, வீடமைப்பு, இழப்பீடு மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கும் பொருட்டு ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டுமெனவும், சட்ட மாற்றங்களுடன் நடைமுறைச் சாத்தியமான ஆதரவுகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
