சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்றவர்கள் பயணித்த கார் ஒன்று, நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியை விட்டு விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று புதன்கிழமை (19) இரவு 11 மணியளவில் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு சென்று, தமக்கு சிவனொளிபாதமலை யாத்திரை செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரவில் பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்பதால், மறுநாள் காலையில் வருமாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, தங்குவதற்கு இடம் ஒன்றைத் தேடி அவர்கள் மீண்டும் காரில் புறப்பட்டுச் சென்றபோது, நள்ளிரவு 12 மணியளவில் மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் வைத்து வீதியில் கார் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த வேளையில் காரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் பயணித்துள்ளதுடன், அதிர்ஷ்டவசமாக அவர்களில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது.
