திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும் போதைப்பொருள் தொடர்பான குற்றம் ஒன்றிற்காக தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர், மித்தெனிய பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதான குறித்த சந்தேகநபர், ஆகஸ்ட் 19 ஆம் திகதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைக்காக தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மித்தெனிய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பொலிஸார் சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, கடந்த 12 ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் வைத்து ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு குறித்த சந்தேகநபர் உதவியமை தெரியவந்துள்ளது.
இதற்கமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபரை வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்தக் கொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்த மற்றுமொரு சந்தேகநபர் நேற்றைய தினம் தங்கல்லை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
