சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பில், இலங்கையின், உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
இம்ரான் கானை மருத்துவமனையில் அனுமதித்து, அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் மற்றும் சகோதரியான மருத்துவர் உஸ்மா கான் அடங்கிய மருத்துவக் குழுவின் மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், குடும்பத்தினரின் வாராந்த சந்திப்புகளை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அது முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், இம்ரான் கான் சில மணிநேரங்கள் மட்டுமே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததுடன், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவினால் பரிசோதிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள முன்னாள் தலைவர்கள், மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதன்படி, இம்ரான் கானின் வலது கண் பார்வை இழப்பு தொடர்பில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட மருத்துவக் குழாமின் மூலம் சுயாதீனமாக பரிசோதனை நடத்தப்பட வேண்டும், வாராந்த குடும்பச் சந்திப்புகள் தடையின்றி அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளாக அல்லாமல் முன்னாள் சக வீரர்களாகவும் போட்டியாளர்களாகவுமே இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும், பாகிஸ்தானின் உள்நாட்டுச் சட்ட நடைமுறைகளில் தலையிட விரும்பவில்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த அவசரக் கோரிக்கையில் அர்ஜுன ரணதுங்கவுடன் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ஆலன் போடர், ஸ்டீவ் வோக், கிரெக் செப்பல், இயன் செப்பல், கிளைவ் லொயிட், அலஸ்டயர் குக், அடம் கில்கிறிஸ்ட், நாசர் ஹுசைன் மற்றும் டேவிட் கோவர் உள்ளிட்ட பல பிரபல முன்னாள் வீரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேவேளை, இம்ரான் கானின் கண் பாதிப்பு மற்றும் சிறையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாதமை குறித்து பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது முறையீட்டுக் கடிதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
