2024 முதல் 2026 இதுவரையான காலப்பகுதியில் நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநாடு சென்று தலைமறைவாயிருந்த சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 42 சந்தேகநபர்களும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாத 38 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவினால் நேற்று செவ்வாய்க்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தை புறக்கணித்து வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு கொண்டு வர அரச பொறிமுறை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் மாஅதிபரின் நேரடி மேற்பார்வையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 42 சந்தேகநபர்களும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாத 38 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
மேலும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மேலும் 109 சந்தேக நபர்களையும் எதிர்வரும் இரண்டு, மூன்று வருடங்களுக்குள் கைதுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் விசாரணை பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, 2024 ஆம் ஆண்டு 1,549 மில்லியன் ரூபா சொத்துக்களும், 2025 ஆம் ஆண்டு 1,490 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 839 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த மூன்று வருடங்களில் மொத்தம் 3,878 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. “முழு நாடும் ஒன்றாக’’ எனும் தேசிய திட்டத்துக்கமைவாக குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்க 1818 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள் எவரும் இந்த நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்கள் அனைவரையும் விரைவில் கைது செய்து நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
