மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரச திணைக்களங்களின் சாரதிகள், குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் இணைந்து அரச வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருளில் மோசடி செய்து வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக துறைசார் அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, மோசடிக்கு உடந்தையாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பி. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (28) வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு தேவையான டீசல், தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்டு வருவதாகவும், அதற்கான பணம் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களினால் மாதாந்தம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் முன்வைத்த குற்றச்சாட்டின்படி, உதாரணமாக ஒரு அரச வாகனத்திற்கு 100 லீற்றர் டீசல் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அதில் 50 லீற்றர் மாத்திரம் வாகனத்திற்கு நிரப்பப்பட்டு, மீதமுள்ள 50 லீற்றர் எரிபொருள் பதிவுகளில் முழுமையாக நிரப்பப்பட்டதாகக் காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
மீதமுள்ள எரிபொருளை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் வழங்கி, அதற்குப் பதிலாக ஒரு லீற்றருக்கு சுமார் 300 அல்லது 310 ரூபாய் வீதம் பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறப்படும் நிலையில், அரசாங்கத்திற்கு மாதாந்தம் பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், இது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்க அதிபர், சுகாதாரப் பணிப்பாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அரச வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் போது சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரி ஒருவரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பி கண்காணிப்பை மேற்கொள்வதன் மூலம் இவ்வாறான முறைகேடுகளைத் தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச் சபை நிலையத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை அரச திணைக்கள வாகனங்களுக்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், மோசடிகளை கட்டுப்படுத்துவதுடன் அரசாங்கத்திற்கும் பயன் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸார் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்தால், தம்மிடம் உள்ள ஆதாரங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அந்தனிசில் ராஜ்குமார் கூறினார்.
மேலும், மாவட்டத்தில் சில அரச வாகனங்கள் அரச உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அண்மையில் விளையாட்டு நிகழ்வொன்றில் அரச அதிகாரி ஒருவர் அதிதியாகக் கலந்துகொண்டிருந்தபோது, அரச வாகனம் சுமார் மூன்று மணித்தியாலங்கள் இயங்கிய நிலையில், குளிரூட்டியை இயக்கியபடி சாரதி வாகனத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அரச வாகனங்கள் மற்றும் அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அனைத்து அரச
