அநுராதபுரம், கொரகஹவெவ காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க முயற்சி செய்துள்ள சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் முற்பகல் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கொரகஹவெவ காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்கு வைத்து அவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேவேளை, படுகாயமடைந்த கணவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த பெண் உலுக்குலம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
