வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான, சுமார் 12 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று வெல்லம்பிட்டி – சேதவத்தை பகுதியில் சோதனை நடவடிக்க ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே குறித்த சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடமிருந்து 4 கிலோகிராம் 170 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிலோகிராம் 55 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டது என சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபா ரொக்கப் பணமும் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சேதவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.
தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரினால் இந்த போதைப்பொருள் , சந்தேகநபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
