எல் நினோவின் மிகக் கடுமையான தாக்கம் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். 2027 பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மழைப்பொழிவு கணிசமாகக் குறைந்து, நாடு முழுவதும் கடுமையான வறட்சியான காலநிலையும், வெப்பநிலையின் அளவும் அதிகரிக்கும்.
எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குறுகிய காலத்தில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் என்.கே. விஜேமான்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
எல் நினோ என்பது உலகளாவிய ரீதியில் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை மாறுப்பட்ட அதிகரிப்பதால் ஏற்படும் ஒரு சிக்கலான காலநிலை மாற்றமாகும். இது குறுகிய காலத்தில் முடிவடையும் ஒன்றல்ல,வழக்கமாக 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கக்கூடியது.
தற்போது இந்த எல் நினோ காலநிலை பலவீனமான நிலையிலிருந்து மிதமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், உலகளாவிய கணிப்புகளின்படி இந்த முறை எல் நினோ மிகவும் சக்திவாய்ந்ததாக மாறுவதற்கு 90சதவீதத்தக்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன. கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல் நினோ தாக்கங்களை விட இது மிகக் கடுமையானதாக மாறுவதற்கு 69 சதவீதமாக வாய்ப்பு இருப்பதாக உலகலாவிய மட்டத்தில் எதிர்வுகூறப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை காலத்தில் வழக்கமாக கிடைக்கும் மழை வீழ்ச்சியின் அளவு குறையும். ஜூலை மாத இறுதியிலும் ஆகஸ்ட் மாதத்திலும் நாட்டின் பல பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும். பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் மாற்றங்களால் செப்டம்பர் மாதத்தில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எல் நினோ காலத்தில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குறுகிய காலத்தில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் உருவாகலாம்.
எல் நினோவின் மிகக் கடுமையான தாக்கம் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.2027 பெப்ரவரி , மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மழைப்பொழிவு கணிசமாகக் குறைந்து, நாடு முழுவதும் கடுமையான வறட்சியான காலநிலையும், வெப்பநிலையின் கடும் உயர்வு நிலவும்.
சமூக வலைத்தளங்களில் பரவும் ஆதாரமற்ற போலியான விடயங்களை நம்பாமல், வளிமண்டலவியல் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அறிவியல் பூர்வமான வானிலை அறிக்கைகளை மட்டுமே பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
