சுகாதாரத் துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகப்படுத்துவது மற்றும் இலங்கை – இந்தியாவுக்கிடையிலான சுகாதார பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மற்றும் இந்தியாவின் சி-கேம்ப் உயிரியல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரும் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான தஸ்லிமாரிஃப் சையத் உள்ளிட்ட குழுவினருக்கிடையில் அண்மையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையைப் பலப்படுத்துதல், தொற்றா நோய்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான சிகிச்சைச் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் உயிரியல் தொழில்நுட்பத் திணைக்களத்தின் கீழ் 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட ‘சி-கேம்ப்’ நிறுவனம், உலகளவில் 500 க்கும் மேற்பட்ட ஆரம்பத் தொழில்முயற்சிகளுக்கு ஆதரவளித்து வரும் முன்னணி சர்வதேச அமைப்பாகும்.
இச்சந்திப்பின் போது மரபியல் ஆராய்ச்சி, நோய் நிர்ணயக் கருவிகள் மற்றும் சுகாதாரத் தொழில்நுட்ப தயாரிப்புகளில் சி-கேம்ப் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதி அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இருநாடுகளுக்குமிடையிலான சுகாதாரத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டது.
