நீண்ட காலமாக காணி உரிமை, வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு சம்பள அதிகரிப்பு உட்பட வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும் என கைத்தொழில்,பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) பிரதமரிடமான வினா நேரத்தில் மனோ கணேசன் எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் சார்பில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் 6.000 வீடுகளை மலையக மக்களுக்காக வழங்குவோம் என தெரிவித்திருந்தோம். எனினும் அது இடம்பெறவில்லை என மனோ கணேசன் எம்பி தெரிவிக்கின்றார். உண்மையில் அது அவ்வாறில்லை அதைவிட அதிகமான வீடுகளை நாம் மலையக மக்களுக்காக வழங்கவுள்ளோம்.
வீடு ஒன்றை நிர்மாணிப்பது என்றால் அது ஒரு நாள், இரண்டு நாளில் முடியாத காரியம். ஹப்புத்தளையில் ஹல்துமுல்ல, கபரகலை பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி அதனை அந்த மக்களுக்குக் கையளித்தார்.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடும் மழை, வெள்ளம் காரணமாக ஒரு லயன் தொகுதி முற்றாக அழிந்தது. அதில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
அப்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அதற்கு மாற்றீடாக மூடப்பட்டு மிக மோசமான நிலையிலிருந்த தேயிலைத் தொழிற்சாலையில் அந்த மக்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிள்ளைகளுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டனர். உண்மையில் அந்த மக்களின் மொழியில் கூறுவதானால் அது ஒரு அகதிகள் முகாமே.
இதுவரை காலமும் அந்த மக்கள் குறித்த முகாமில் தான் வாழ்ந்து வந்தனர்.ஏதோ காரணங்களால் அப்போதைய அரசாங்கத்தினால் அவர்களுக்கு வீடு வழங்க முடியாமல் போனது.
எமது அரசாங்கம் 2025 மார்ச் மாதம் 15ஆம் திகதி அந்த வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி, இராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு மூன்றரை வருடங்களாக அகதி முகாமில் வாழ்ந்த மக்களுக்கு 50 வீடுகள் வழங்கப்பட்டன.
அத்துடன் கடந்த அரசாங்க காலத்தில் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியே வழங்கப்பட்டது. எனினும் எமது அரசாங்கம் அதனை மேலும் அதிகரித்து 10 பேர்ச் காணியை அந்த மக்களுக்கு வழங்குகிறது.
நாம் பூணாகலை பகுதியில் நிர்மாணித்துள்ள வீடுகளின் பெறுமதி காணியுடன் சேர்த்து 83 இலட்சமாகும். அதில் காணிக்கு 5 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த நிகழ்வின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப் பத்திரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல அது வெறும் காகிதம் மட்டுமே என மனோ கணேசன் எம்பி கூறினார். அந்தக் கூற்றை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். நாம் அந்த மக்களுக்கு நிரந்தர காணி உரிமைப் பத்திரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அத்துடன் அன்று பூனாகலை நிகழ்வில் வைத்து அவ்வாறான 168 காணி உறுதிப் பத்திரங்களையும் வழங்கியுள்ளோம்.
மேற்படி காணிகள் தோட்ட நிறுவனங்களின் கீழ் உள்ளதால் அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காணி சீர்திருத்த ஆணைக்குழு எமது விவசாய அமைச்சின் கீழ் உள்ளது. அந்த நிறுவனத்துடன் கலந்துரையாடி தொடர்ச்சியாக காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் சாதாரண உறுதிப் பத்திரமே வழங்கப்படும் எனினும் பின்னர் நிரந்தர காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே மலையக மக்களுக்கு அனைத்து உரிமைகளும் நலன்களும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன என்பதால் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு வேதனையாக இருக்கலாம்.
மலையக மக்களுக்கு எமது அரசாங்கம் உரிமைகளை பெற்றுக் கொடுத்துள்ளது என்பதை நாம் குறிப்பிட வேண்டும். அதிகமான வீடுகள் எமது அரசாங்கத்தின் காலத்திலேயே நிர்மாணிக்கப்படுகின்றன. அந்த மக்களுக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுத்ததும் எமது அரசாங்கமாகும்.
எவ்வாறாயினும் நாம் மலையக மக்களுக்கு காணி வழங்குவோம் வீடுகளையும் வழங்குவோம். சம்பளத்தையும் அதிகரிப்போம் அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுப்போம் என்றார்.
