பண்டாரவளை மாநகர சபைக்கு சொந்தமான கடைகளை நீண்டகால குத்தகைக்கு வழங்குவதாகக் கூறி போலி ஆவணங்களைத் தயாரித்து, வர்த்தகர்களிடமிருந்து 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஆர்.எம். ஜானக்க நிஷாந்த ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (09) மாலை 6.45 மணியளவில் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு பண்டாரவளை மாநகர சபைக்கு சொந்தமான 08 கடைகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதாகக் கூறி, போலி ஆவணங்களைத் தயாரித்து வர்த்தகர்களிடமிருந்து 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பெறப்பட்ட பணம் மாநகர சபையின் உத்தியோகபூர்வ கணக்கில் வைப்புச் செய்யப்படாமல், தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டு மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பண்டாரவளை மாநகர சபை ஆணையாளர் பி. கஜேந்திர குமார் 2025 ஆம் ஆண்டு பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் அடிப்படையிலேயே முன்னாள் மேயர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
