வெளிநாடுகளில் தொழில்புரியும் போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட 6 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை 14 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜூன் மாதம் 26 ஆம் திகதிக்கு பின்னர் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இந்த இழப்பீட்டு தொகை வழங்கப்படவுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக நேற்று வியாழக்கிழமை (10) இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 20 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை காலமும் 6 இலட்ச ரூபாவாக காணப்பட்ட இந்த தொகையுடன், பணியகத்தின் மேலதிக நிதியிலிருந்து 14 லட்ச ரூபாவைச் சேர்த்து 20 இலட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதற்கட்டமாக உயிரிழந்த 50 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 7 கோடி ரூபா அளவிலான நிதி இழப்பீட்டுத் தொகையாக வழங்கி வைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் சுமார் 3 இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் நிலையில், நோய்வாய்ப்படுதல், விபத்துக்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக 200 முதல் 250 பேர் வரை உயிரிழிக்கிறார்கள். குடும்பத்தின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இக்குடும்பங்களைப் பாதுகாப்பதே அரசின் பிரதான நோக்கம்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் நீண்டகால கனவான சொந்த வீடமைக்கும் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், எதெர திரி என்ற புதிய வீட்டுக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 5 இலட்சம் ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபா வரையிலான கடன் வசதிகள் 11 முன்னணி வங்கிகள் ஊடாக வழங்கப்படுகின்றன.
இக்கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு 10 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால அவகாசம் அளிக்கப்படுவதுடன், தொழிலாளர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் பொருட்டு, வங்கிகளால் ஈட்டப்படும் வட்டித் தொகையின் கணிசமான பகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமே நேரடியாக ஏற்றுக்கொள்கிறது.
அத்துடன், வெளிநாடுகளில் உழைத்த பணத்தைக் கொண்டு நாட்டில் தொழில்முனைவோராக விரும்பும் இலங்கையர்களுக்குப் புதிய முதலீட்டு வாய்ப்புகளும் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, விவசாயம், சுற்றுலாத்துறை, தொழிற்சாலைகள் அல்லது ஏனைய வணிகத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக, பயன்படுத்தப்படாத சுமார் 4 ஹெக்டேர் வரையிலான அரச காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் அவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டுச் சேவையை முடித்து நாடு திரும்பும் தொழிலாளர்களின் முதியோர் காலப் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான விசேட ஓய்வூதியத் திட்டம் ஒன்றும் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றார்.
