கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் பொலிஸ் அதிகாரியுடன் மோதலில் ஈடுபட்டு, அவரது துப்பாக்கியைப் பறித்து மற்றொரு பொலிஸ் அதிகாரியைச் சுட்டுக் காயப்படுத்திய பின்னர் தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல விசேட பொலிஸ் குழுக்கள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது, திவுலபிட்டிய பகுதியில் நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறித்த சந்தேகநபரை 31 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பொலிஸாரிடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இவர், 2008 முதல் 2010 வரை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுநாயக்க நகரப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், தாக்குதலில் காயமடைந்த மற்றொரு பொலிஸ் அதிகாரி மினுவாங்கொட வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
