மாகும்பரபல்முக போக்குவரத்து மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் பரிசோதனையில், நான்கு பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதி பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தினால் இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் விசேட குழுவினால் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையில், சுமார் 150 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பொது போக்குவரத்து துறையில் ஒழுக்கமான மற்றும் போதைப்பொருள் இல்லாத பணியாளர்களை உருவாக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தப்படும் நபர்களுக்கு நிறுவன ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கைகளுடன், சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
