கிழக்கு உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில், 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கப்சோர்வா (Kapchorwa) மாவட்டத்தின் செக்வாடிட் (Chekwatit) கிராமத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (16) இந்த விபத்து இடம்பெற்றதாக உகாண்டா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘கிங் டேவிட் ஜூனியர்’ பாடசாலைக்குச் சொந்தமான பஸ், சிபி நீர்வீழ்ச்சிக்கான கல்விச் சுற்றுலாவை முடித்துவிட்டு தலைநகர் கம்பாலா நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் வீதியை விட்டு விலகி பெரிய பாறையில் மோதிய பின்னர் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 28-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவர்களின் பெயர் மற்றும் வயது விபரங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், பாடசாலையின் நிறுவனர் மற்றும் அதிபரும் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் பாடசாலை சுற்றுலா மற்றும் கல்விப் பயணங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உகாண்டா அரசு அறிவித்துள்ளது.
