எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, அடுத்த வருட இறுதிக்குள் உலகலாவியரீதியில் சுமார் 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
மிகவும் வலுவான எல் நினோ நிகழ்வு ஏற்படுவதற்கு 81 சதவீத வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுபிக் சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை 1982 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாகவும், இது 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்படும் மிகவும் சக்திவாய்ந்த எல் நினோ நிகழ்வாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுபிக் சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை அவ்வப்போது வெப்பமடைவதையே எல் நினோ என அழைக்கிறோம். இது உலகளாவிய வானிலை முறைகளை மாற்றியமைப்பதுடன், தென் ஆபிரிக்காவில் வறட்சி, ஆசியாவின் சில பகுதிகளில் தாமதமான பருவமழை மற்றும் பிற இடங்களில் சீரற்ற மழைவீழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது.
“கடந்த காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் பாரியளவிலான பட்டினிப் பஞ்சத்தை தூண்டியுள்ளன” என உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு சேவையின் பணிப்பாளர் ஜீன்-மார்ட்டின் பாவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எல் நினோவின் மோசமான விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய 45 நாடுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை சுமார் 49 மில்லியனால் அதிகரித்து, மொத்தம் 274 மில்லியன் மக்களாக உயரும் என உலக உணவுத் திட்டம் மதிப்பிட்டுள்ளது. இது ஏற்கனவே தீவிர உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் 22 சதவீத அதிகரிப்பாகும்.
மத்திய அமெரிக்கா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களே இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பற்ற மக்களின் எண்ணிக்கை மத்திய அமெரிக்காவில் 83 சதவீதமாகவும், தென் ஆபிரிக்காவில் சுமார் 75 சதவீதமாகவும் அதிகரிக்கும் என அறிக்கை கூறுகிறது.
தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் தலா 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்திற்குள் தள்ளப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கிழக்கு ஆரிக்காவின் சில பகுதிகள், சாஹெல் (Sahel), மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பகுதிகளில் மழைவீழ்ச்சி பற்றாக்குறை ஏற்படும் என தற்போதைய கணிப்புகள் சுட்டிக்காட்டுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சோமாலியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கக்கூடும்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் கணிசமான தாக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அங்கு வறட்சி அபாயம், ஒழுங்கற்ற பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாய உற்பத்தி பாதிக்கப்படலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த முன்னறிவிப்புகளில் நிச்சயமற்ற தன்மைகள் இருப்பதாகவும், பிராந்தியங்களுக்கு ஏற்ப தாக்கங்கள் மாறுபடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள உலக உணவுத் திட்டம் அரசாங்கங்களும் நிவாரண முகவரகங்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
18 நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை திட்டங்களை உலக உணவுத் திட்டம் விரிவுபடுத்தியுள்ளதாக அதன் காலநிலை மற்றும் மீள்கட்டியெழுப்பல் சேவையின் பணிப்பாளர் ரிச்சர்ட் சூலார்டன் தெரிவித்தார். தீவிர வானிலை பாதிப்புகளின் போது உதவுவதற்காக இந்த ஆண்டு இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பண உதவி மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
