தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 73 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கறுப்பு பணச்சுத்திகரிப்பு வழக்கின் மேலதிக விசாரணைகளை ஜூலை 24ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிகாட்டலின் கீழ், முறைப்பாளர் தரப்பு சாட்சிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
அதேவேளை, யோஷித ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், வாதத்தரப்பு சார்பிலான குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்.
விசாரணைகளை தொடர்ந்து, வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஜூலை 24ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கறுப்பு பணச்சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் கூறி, சட்டமா அதிபரினால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
