வரி செலுத்த வேண்டியிருந்தும் அதனைத் தவிர்ப்பவர்கள், வரிப் பதிவை மேற்கொள்ளாதவர்கள் மற்றும் வரி அறிக்கைகளை சமர்ப்பிக்காத தனிநபர்கள், நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
2026 ஜூன் 3ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ், சட்டத்துக்கு இணங்கத் தவறும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரும் அதிகாரம் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரிப் பதிவு செய்யாமை, வருமான வரி மற்றும் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறுதல் ஆகியவை சட்டப்படி குற்றங்களாகக் கருதப்படும்.
முதலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு, அதன்பின் 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அந்தக் காலப்பகுதிக்குள் சட்டத்துக்கு இணங்கத் தவறினால், நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியாக நிரூபிக்கப்படுபவர்களுக்கு ரூ.400,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் விதிக்க முடியும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
