முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான இறுதி முடிவு, அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்த பின்னரே எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மனைவி, மகன், மெய்பாதுகாவலர் உள்ளிட்ட நெருங்கியவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக திறந்த நீதிவான் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட அனைத்து சான்றுப்பொருட்களும் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, மரணத்தின் உண்மையான காரணம் தொடர்பான உறுதியான முடிவு, அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்த பின்னரே அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விவகாரத்தில் வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
