இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 40 பந்துகளில் அதிரடியாக அரைசதம் கடந்துள்ளார்.
இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 6 முறை 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற இங்கிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 6 அல்லது அதற்கு மேற்பட்ட முறை அரைசதங்களை அடித்த 13-வது துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் ஆவார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வரும் ஜோ ரூட், தற்போது ஒருநாள் போட்டியிலும் அவரது சாதனையை விஞ்சியுள்ளார்.
கடந்த 1994 ஆம் ஆண்டில் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 5 அரைசதங்களை மட்டுமே அடித்திருந்தார்.
கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் பெற்றவர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் ஜாவேத் மியான்டட் முதலிடத்தில் உள்ளார்.
அவர் 1987-ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் அரைசதம் கடந்து வரலாற்று சாதனை படைத்தார்.
அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக் 2021-2022 ஆண்டு தொடர்ச்சியாக 7 முறை 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகளின் கோர்டன் கிரீனிட்ஜ் 1979-1980 ஆண்டிலும், நியூசிலாந்தின் ஆண்ட்ரூ ஜோன்ஸ் 1988-1989 ஆண்டிலும், அவுஸ்திரேலியாவின் மார்க் வோக் 1999 ஆண்டிலும், பாகிஸ்தானின் முகமது யூசுப் 2003 ஆண்டிலும் ஆகியோர் தொடர்ச்சியாக 6 முறை அரைசதங்களை பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் தற்போது ஜோ ரூட்டும் இணைந்துள்ளார்.
