பாலஸ்தீன அரசின் தூதுவர் மேன்மைதங்கிய இஹாப் ஐ. எம். கலீல் மற்றும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதிவணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து கொழும்பு டி லா சால் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது, கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ஆர். ஜே. ஜெயகாந்தன் மற்றும் கல்விசார் பணியாளர்களுடன் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக, கல்லூரியின் கல்விசார் செயற்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாலஸ்தீன அரசின் தூதரகம் சார்பில், தூதுவர் மேன்மைதங்கிய இஹாப் ஐ. எம். கலீல் அவர்களால், கொழும்பு டி லா சால் கல்லூரியின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நன்கொடையொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
