தம்பதீவ மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கான மத யாத்திரைகளை தடை செய்ய தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பிரணாந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை தொழில் அமைச்சு மறுத்துள்ளது.
குறித்த தகவல் முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள அமைச்சு, அமைச்சர் இவ்வாறான எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட சில குழுக்களால் நாட்டின் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் இவ்வாறான போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான அடிப்படையற்ற மற்றும் தரக்குறைவான பொய்ப் பிரசாரங்களுக்கு தமது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
