ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான ஜி. காசிலிங்கம், இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) வெளிநாட்டு விவகாரப் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் விஜய் சௌதாய்வாலேவை புதுடெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் பயனுள்ள பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜி. காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது X சமூக ஊடகப் பதிவில், இரு கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான நீண்டகால நட்புறவை மேலும் ஆழப்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் (டாக்டர்) அசீர்வாதம் ஆச்சாரி வழங்கிய அன்பான வரவேற்புக்கு நன்றியைத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்திலும் இரு கட்சிகளுக்கிடையிலான தொடர்ச்சியான தொடர்புகள் நீடிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
