இலங்கையில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், எலிகளின் சிறுநீரில் காணப்படும் Leptospira என்ற பக்டீரியாவால் இந்த நோய் பரவுவதாகவும், நாட்டில் அதிகம் காணப்படும் தொற்றுநோய்களில் இதுவும் ஒன்றாக இருப்பதுடன், உயிரிழப்பு அபாயமும் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகள், சேற்றுப் பகுதிகளில் பணிபுரிபவர்கள், வடிகால் சுத்தம் செய்பவர்கள், தோட்டத் தொழிலாளர்கள், கைவிடப்பட்ட வயல்கள் மற்றும் சேற்று நிலங்களில் விளையாடும் சிறுவர்கள், தேங்கிய நீர், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிப்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சேற்றுப் பகுதிகளில் பணிபுரிபவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி டொக்சிசைக்ளின் (Doxycycline) மருந்தை தடுப்பு சிகிச்சையாகப் பெற்றுக்கொள்ளுமாறும், அது மருத்துவ சுகாதார அதிகாரி (MOH) அலுவலகங்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக இலவசமாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கண்வலி போன்ற ஆரம்ப அறிகுறிகள் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றே காணப்படுவதால், சுயமாக மருந்து உட்கொள்ளாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
