கொழும்பு சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தின் நீச்சல் தடாகத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய மின்னணு நேரக் கணிப்பு முறைமை (Electronic Timing System) உள்ளிட்ட சர்வதேசத் தரத்திலான நவீன விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட இந்த வசதிகளை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் பிரதி அமைச்சர் சுஹத் திலகரத்ன ஆகியோர் இன்று (24) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
பழைய உபகரணங்களுக்குப் பதிலாக, சர்வதேசத் தரத்திலான மின்னணு நேரக் கணிப்பு முறைமை, தொடு உணர் பலகை (Touch Pad System), டிஜிட்டல் திரைப் பலகை (Digital Display Board) மற்றும் ஆரம்பக் கட்டைகள் (Starting Blocks) ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
இந்த நவீன வசதிகள் போட்டிகளின் நேரக் கணிப்பை மேலும் துல்லியமாக்குவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராகும் நீச்சல் வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேசத் தரத்திலான பயிற்சி மற்றும் போட்டி அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
