உக்ரைனின் கீவ் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்புத் துறை தொடர்பான நிகழ்வு நடைபெற்ற இடமே தாக்குதலின் இலக்காக அமைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு உக்ரைனின் ட்ரோன் தயாரிப்பாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பாதுகாப்புத் துறை பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஏவுகணைகளே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என குற்றம்சாட்டியதுடன், போர்க்கால சூழலில் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கீவ் வடபகுதியில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின்னர் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக உக்ரைன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கு அருகிலிருந்த இடிபாடுகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, பாதுகாப்பு கண்காட்சி ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைபாடுகள் தொடர்பில் உக்ரைன் அதிகாரிகள் குற்றவியல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், கிழக்கு உக்ரைனின் ஸ்லோவியான்ஸ்க் நகரில் இடம்பெற்ற மற்றுமொரு வான்வழித் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
