தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் இலங்கையிலுள்ள கொரியக் குடியரசின் தூதுவர் அதிமேதகு மியோன் லீ (Miyon Lee) அவர்கள், ஜூலை 28 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் வைத்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துப் பேசினார்.
தனது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதற்காகத் தூதுவர் வழங்கிய ஒத்துழைப்புகளுக்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துதல், கொரிய ஆதரவின் கீழ் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் விவசாயம், கல்வி, காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
