பீர் உற்பத்தியில் பிரதான மூலப்பொருட்களாக அரிசி மற்றும் சீனியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி மீண்டும் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், மதுபான உற்பத்தி நிறுவனங்கள் பீர் தயாரிப்பில் அரிசி மற்றும் சீனியை பயன்படுத்துவது சட்ட விதிகளுக்கு முரணானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மனு தொடர்பில் எதிர்வாதிகளான மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், எதிர்ப்புகளை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியதையடுத்து, நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வணிக நோக்கிலான மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுவதால் தேசிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, மனு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
