பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று (30) கொழும்பு நீதிவான் அஸங்க எஸ். போதரமை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணைகள் நிறைவடைந்து கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், பான் ஏசியா மற்றும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிகளின் கணக்கு அறிக்கைகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியதாகவும் CID அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வங்கி அறிக்கைகளை விரைவாகப் பெற்று விசாரணை முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
