பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கில்கிட் பகுதியில் அமைந்துள்ள, உலகின் 12வது உயரமான சிகரமான பிராட் பீக்கில் (Broad Peak) ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன 10 மலையேற்ற வீரர்களைத் தேடும் பணியின் போது, நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கில்கிட் சுற்றுலாத்துறை அமைச்சரும் அந்த பகுதியின் பொலிசாரும் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவற்றில் இருவரின் உடலங்களை அடையாள காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகப் புகழ்பெற்ற நேபாள நாட்டின் மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா (Nirmal Purja) உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர், கடந்த 30 ஆம் திகதி மதிய வேளையில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இந்தக் குழுவில் 6 நேபாள நாட்டினரும், அமெரிக்கா, சீனா, ஓமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் கடந்த 2019ஆம் ஆண்டில் ஆறு மாத காலத்திற்குள் உலகின் 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட 14 சிகரங்களையும் ஏறி உலக சாதனை படைத்த நிர்மல் புர்ஜாவின் நிலை குறித்து இதுவரை எந்த வித தகவலும் வெளியாகவில்லை.
