எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட 121 மெட்ரோ பேருந்துகள் தற்போது பதிவு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை நிறைவடைந்ததும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், புதிய வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர், ஜப்பானிலிருந்து மேலும் 50 பேருந்துகள் கிடைக்கவுள்ளதால் சேவையை கொழும்பைத் தாண்டி யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை விரிவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் மெட்ரோ பணிமனைகள் அமைக்கும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
