மகாவலி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அடுத்த 48 மணித்தியாலங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் சிவப்பு நிலை வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (03) பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, எதிர்வரும் புதன்கிழமை (05) பிற்பகல் 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை, தொடரும் மழைக்கான சாத்தியம் மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படும் வாய்ப்பு காரணமாக வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்க இஹல கோரளை, பஸ்பாகே கோரளை, கங்கவட கோரளை, ஹரிஸ்பத்துவ மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
