நுவரெலியா பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிரிகரி குளத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால், அக்குளத்தின் வான் கதவு இன்று (04) பிற்பகல் திறக்கப்பட்டதாக நுவரெலியா பேரிடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நுவரெலியா நிலவும் கடும் சீரற்ற வானிலை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, பாதுகாப்பு கருதி கிரிகரி குளத்தில் படகு சவாரி செய்வதை நுவரெலியா மாநகர சபை தற்காலிகமாக தடை செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நுவரெலியா – பதுளை பிரதான வீதி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி மற்றும் நுவரெலியா கண்டி பிரதான வீதி ஆகியவற்றிலும், டொப்பாஸ் முதல் லபுகலை வரையான பகுதியிலும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, அந்த வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு காவல்துறை சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
