அம்பாறை -சம்மாந்துறை மல்லிகைத்தீவு மற்றும் மல்வத்தை ஆகிய பகுதிகளில் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த இரு சட்டவிரோதக் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் நேற்று புதன்கிழமை (05) சம்மாந்துறை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளன.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இச்சோதனை நடவடிக்கையின் போது மல்வத்தை மல்வத்தை – கணபதிபுரம் பாடசாலை முன்பகுதியில் கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1 இலட்சம் மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதுடன், 57 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.அதேபோன்று, மல்லிகைத்தீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5 கேன்களில் அடைக்கப்பட்டிருந்த 1 இலட்சம் மில்லி லீற்றர் கோடாவுடன் 43 வயதுடைய பெண் சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களும் சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
