மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் விற்பனை செய்யப்படும் புட்டின் விலையை ரூ.250 இலிருந்து ரூ.150 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநகர சபை சுயேச்சைக் குழு உறுப்பினர் சீனித்தம்பி ஜேந்திரகுமார் (ஜெயா) கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் 16ஆவது சபை அமர்வு இன்று (06) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றபோது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் ஒரு புட்டு ரூ.250க்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கல்லடி உள்ளிட்ட பகுதிகளில் இதே அளவிலான புட்டு ரூ.150க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தற்போது ஒரே குழலில் மூன்று அல்லது நான்கு புட்டுகளை சேர்த்து அவிப்பதால் அவற்றின் அளவும் சிறியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விலையை ரூ.150 ஆக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, ஆலய உற்சவ காலத்தில் பல பெண்கள் நிலத்தில் பாய் விரித்து புட்டு அவித்து, கத்தரிக்காய் கறியுடன் விற்பனை செய்து வருவதாகவும், இரவு நேரங்களில் பக்தர்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பொதுமக்கள் அதிகளவில் புட்டை வாங்கிச் சாப்பிடுவதால், மாமாங்கேஸ்வரர் ஆலயப் பகுதி புட்டுக்கு பிரபலமான இடமாக திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
