மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு (Mohamed Muizzu) நாளை ஞாயிற்றுக்கிழமை (03) முதல் எதிர்வரும் 06ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதனை முன்னிட்டு அவரின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கருத்திற்கொண்டு, கொழும்பு நகரை மையப்படுத்தி விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாளை மாலை மாலைத்தீவு ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும், அங்கிருந்து கொழும்பு நோக்கி வரும் அதிவேக நெடுஞ்சாலை, பேலியகொடை, ஒருகொடவத்தை, ஆர்.ஏ.டி மெல் மாவத்தை மற்றும் காலி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் போக்குவரத்து அவ்வப்போது மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், 04ஆம் திகதி ஜனாதிபதி செயலகம், விகாரமகாதேவி பூங்கா மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய இடங்களுக்கு ஜனாதிபதி செல்லும் நேரங்களில் என்.எஸ்.ஏ. சந்தி, காலி முகத்திடல் மற்றும் அதனைச் சூழவுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
மே 05ஆம் திகதி தேசிய அருங்காட்சியகம், மாலைத்தீவு தூதரகம் மற்றும் மாலைத்தீவு கலாசார மத்திய நிலையம் ஆகிய இடங்களுக்குச் அவர் செல்லும் பயணத்தின் போது திம்பிரிகஸ்யாய மற்றும் பௌத்தாலோக மாவத்தை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
06ஆம் திகதி ஜனாதிபதி மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையம் திரும்பும் போது, காலையில் கொழும்பிலிருந்து வெளியேறும் பிரதான வீதிகளில் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, கண்டி மற்றும் நீர்கொழும்பு வீதியிலிருந்து கொழும்புக்குள் வருவோர், பேலியகொடை பாலம் ஊடாக கிராண்ட்பாஸ், லூம்ஸ் மஹால் சந்தி, பஞ்சிகாவத்தை மற்றும் மருதானை ஊடாக கொழும்பு நகருக்குள் நுழைய முடியும். கடுவெல அல்லது ஜயவர்தனபுர ஊடாக அவிசாவளை வீதியைப் பயன்படுத்தி நகருக்குள் வரமுடியும்.
காலி வீதி மற்றும் ஹைலெவல் வீதி ஊடாக வருவோர், திம்பிரிகஸ்யாய, கிரிவ்வல சந்தி, ஹேவ்லாக் வீதி மற்றும் ஆர்.ஏ.டி மெல் மாவத்தை ஆகிய வீதிகளைப் பயன்படுத்தி நகரின் ஏனைய பகுதிகளுக்குச் செல்லலாம்.
கொழும்பிலிருந்து வெளியேறுவோர், மருதானை, டெக்னிக்கல் சந்தி, சங்கராஜ மாவத்தை மற்றும் ஒருகொடவத்தை ஊடாக அதிவேக நெடுஞ்சாலையை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே குறிப்பிட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் நுழைவது தடைசெய்யப்படும். ஏனைய வாகனங்களின் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்படும்.
எனவே, இந்த நான்கு நாட்களும் அத்தியாவசியத் தேவைகள் அன்றி கொழும்பு நகருக்குள் வருவோர், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
