சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், இலங்கைக்கு 100 நவீன மின்சார சொகுசு பேருந்துகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங், மல்வத்து மற்றும் அஸ்கிரிய அத்தியாயங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பாரம்பரிய எரிபொருட்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வு மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். ஒரு பேருந்தின் மதிப்பு சுமார் 225,000 அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார பேருந்துகள் பிரதானமாக கொழும்பு – கண்டி மற்றும் கொழும்பு – காலி வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
மின்சாரப் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான மின்னேற்ற உள்கட்டமைப்புகளை வழங்குமாறும் இலங்கை போக்குவரத்து அமைச்சின் ஊடாக சீன அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்துகளை இயக்குவதற்கும் தொழில்நுட்ப ரீதியாகப் பராமரிப்பதற்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதனுடன், கொழும்பு, கண்டி, காலி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, வீதி உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் சீனா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டிட்வா சூறாவளி மற்றும் அண்மைய வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பதுளை, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் வீதிகள் மற்றும் பாலங்களைப் புனரமைப்பதற்காக ஆறு சீன நிபுணர்கள் இலங்கை வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், சீனாவின் ‘ஃபோட்டான் இன்டர்நேஷனல்’ நிறுவனத்திடமிருந்து 104 புதிய மெட்ரோ பேருந்துகள் அண்மையில் இலங்கையை வந்தடைந்துள்ளன.
பொதுப்போக்குவரத்து உதவிகளுக்கு மேலதிகமாக, இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்காக 15 மில்லியன் மீட்டர் வெள்ளை நிற சீருடைத் துணிகளையும் சீனா வழங்கியுள்ளது. மேலும், நாட்டிலுள்ள 500 பாடசாலைகளில் 900 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
