கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு இதுவரை எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்தி வைத்தியசாலை கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை கட்டமைப்பில் சீருடை தொடர்பான நடைமுறைகள் காணப்படுவதாகவும், குறித்த விடயம் தொடர்பில் அமைச்சுக்கு இதுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதனை சுகாதார அமைச்சுக்கு அறிவிக்க முடியும் எனவும், அவ்வாறு முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீண்டகாலத்துக்குப் பின்னர் அரசியல் தலையீடுகள் இன்றி தகுதி மற்றும் புள்ளி அடிப்படையில் சுகாதார சேவைக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
92,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தகுதி மற்றும் புள்ளி அடிப்படையில் 1,900 பேர் தெரிவு செய்யப்பட்டதாகவும், அவர்களில் சுமார் 1,860 பேர் நியமனங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
