ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மரணத்திற்கு முன்னர் வழங்கிய சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தன்னை இரு குறிப்பிட்ட பெயர்களைக் குறிப்பிடுமாறு கூறி, தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்ததாக கபில சந்திரசேன தனது சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ளதை பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை கண்டறிய உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“வழக்கு விசாரணைகள் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும்.
எவரும் சாட்சியங்களை இட்டுக்கட்டவோ அல்லது சோடிக்கவோ ஈடுபட முடியாது” என்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.
